ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்
Posted by s.raajakumaran on October 27, 2011 at 4:59 am
வணக்கம் வாலி சார்..விகடனில் இதுவரை நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவு நாடாக்கள் அருமை.ஒரு விஷயத்தை மிக இயல்பாக, எளிமையாக பாராட்ட ஒரு அருமையான வார்த்தை-அருமை.சிறப்பாக இருந்தது என்றால்,அதில் தமிழ் இருக்கிறது.உணர்ச்சி இல்லை.இது தமிழார்வலர்களுக்கு கோபமூட்டலாம்.அனால் உண்மை இதுதான்.உணர்ச்சிகளால் பின்னப்பட்ட ஒரு படைப்பைப் பற்றி வெறும் சக்கைச் சொற்களால் பேசிப் பயன் என்ன? ஒரு சாதாரணன் தெருக்கோடியில் நின்று உண்மை பேசலாம்.அது உலகுக்குத் தெரியாது.ஆனால் புகழ்பெற்ற ஒரு ஆளுமை உண்மை பேசுதல் அரிதிலும் அரிது.அதிலும் ஒப்பனை உலகக் குடிமகன் ஒருவன், உரைத்தல் என்பது அதனினும் அரிதல்லவா!
ஒரு பிரபல இதழில் தொடர் கிடைத்தது என்பதற்காக தனது சுய விருப்பு-வெறுப்புகளை எல்லாம் அஜீரண வாந்தியாகக் கொட்டுவோரே இங்கு அதிகமான பிரபலங்கள்.அதுபோல் நீங்கள் இல்லை.சுய வாழ்வின் ரணங்கள்.அவை தந்த வலிகள்.அனுபவங்கள் தந்த பாடங்கள். தோல்வியில் துவண்ட கணங்கள்.அவையே சாதனையான சந்தோஷ தருணஙகள்…இவற்றையெல்லாம் உண்மையின் நாற்காலி மீது உட்கார்ந்துகொண்டு பகிர்ந்து கொண்ட விதம் வெகு இயல்பு.நீங்கள் எழுதிய தொடரின் நடை ஒரு பாமரப் பெண்ணின் அத்தாச நடை.செயற்கையின் ஒப்பனையின்றி,இயற்கையின் சேறு பூசிய பாணி. எளிமையாக இப்படிச் சொல்லலாம்; சுவை மிகுந்த நம் தஞ்சாவூர் சைவச்சாப்பாட்டை,ஒரு தலைவாழை இலையில் அன்பொழுகும் உபசரிப்போடு பரிமாறிய பக்குவம்.
ஒரு நல்ல திரைப்படம் என்பது தயாரித்தவனுக்கும் வாங்கியவனுக்கும் பார்வையாளனுக்கும் பங்குபெற்றவர்களுக்கும் பயனுள்ளதாக-பெயர் சொல்வதாக இருக்கவேண்டும்.ஒரு பத்திரிகையின் விஷயதானம் என்பது அந்த பத்திரிகைக்கும் அதை வாசிப்பவனுக்கும் அதை வார்த்தவனுக்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும்.அவ்வகையில் உங்கள் நினைவு நாடாக்கள் என்றும், ஆனந்த விகடன் வாசகர்களுக்கு அல்லது உலகத் தமிழர்களுக்கு நினைவில் நிற்கும் நல்லெழுத்தாக-எளிமையின் சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் தமிழ்ப் படைப்புப் பொக்கிஷமாக திகழும் என்பது எனது நம்பிக்கை.ஒரு தமிழார்ந்த வாசகனாக,ஒரு எளிய கலைஞனாக உங்களின் ரசனை மிகுந்த படைப்பு விரல்களைப் பற்றி முத்தமிடுகிறேன்……..
நேசமிகு…
எஸ்.ராஜகுமாரன்
9840124602